Published On: Friday, April 12, 2013
தம்பதிகளின் இரட்டைக் கொலை குறித்து அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள்
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் நீதவான் நீதிமன்றத்தில இடம்பெற்றது. இதன்போது குடும்ப உறவினர்களது சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை பொன்னுத்துரை சுந்தரமூர்த்தி சாட்சியமளிக்கையில்; சம்பவ தினம் நள்ளிரவு வேளையில் அடிக்கும் சத்தம் கேட்டது. எழுந்து முன்னால் இருந்த மகளின் வீட்டைப் பார்த்தேன். ஆள் அலரும் சத்தமும் வந்தது உடனே குசினி பக்கம் சென்றேன். கதவுகள் மூடிய நிலையிலேயே இருந்தன. ஜன்னல் ஊடாக படுக்கையறையைப் பார்த்தேன். மருமகனுக்கு ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான்.
மின்விளக்கு எரிந்த போதிலும் ஜன்னலின் சிறிய துவாரத்தினால் அங்கு அடித்துக்கொண்டிருந்த நபரை அடையாளம் காண முடியவில்லை நான் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினேன். அப்படியிருக்க கதவு மூடும் பொல் தடியொன்று விழும் சத்தம் கேட்டது. அதையடுத்து ஒரு நபர் ஓடிச் செல்வதை காணமுடிந்தது.
நான் மகளின் வீட்டிற்குச் சென்று தம்பி தம்பி என்று மருமகனைக் கூப்பிட்டேன் எந்த பதிலம் கிடைக்கவில்லை. பின்னர் மகள் மகள் என்று கூப்பிடடேன் பதில் எதுவும் இல்லை. அப்படியிருக்க அவ்வீட்டில் உறங்கிய பேத்தி எழுந்து வந்து கூப்பிட்டாள். நான் சத்தமிட்டு குசினிப் பக்கக் கதவைத் திறக்கச் சொன்னேன். திறந்து என்ன அம்மப்பா என்று கேட்டாள். ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மகளின் படுக்கையறைக்குச் சென்றேன். அங்கு மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தவர்களை அழைத்தேன். எவரும் எழுந்துவரவில்லை முன்னால் உள்ள ஆஸ்பித்திரிக்குச் சென்று நிலைமையைக் கூறினேன். அங்கு பொலிஸாருக்கு அறிவிக்கும்படி தெரிவித்தார்கள். ஓடோடிச் சென்று செங்கலடி சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் சம்பவத்தைக் கூறினேன். விரைந்து வந்து பார்த்தார்கள் இவ்வளவுதான் என்னால் கூற முடியும் என்றார்
கொல்லப்பட்டவர்களின் இரண்டாவது மகள் தலக்ஷனா (வயது 16) தனது சாட்சியத்தில்; ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் நான், அப்பா, அம்மா, அக்கா அனைவரும் சித்திரரைப் புத்தாண்டிற்காக உடுப்பு எடுக்க கடைக்குச் சென்று இரவு 7 மணிக்கு பின்பு வீட்டுக்கு வந்தோம்.
அக்கா அம்மம்மாவின் வீட்டில் உறங்கச் சென்றார். எங்கள் அம்மா அக்காவுக்கு இரவுச் சாப்பாட்டிற்காக மீன் கறி எடுத்துச் சென்றார். அக்கா கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கறி கசக்கிறது என்றார். அதற்கு அம்மா “உனக்கு இதுதான் கத” என்றார். அதன் பின்னர் அப்பாவும் கறியைச் சாப்பிட்டுப் பார்த்தார்த்துவிட்டு “ஓம் கசக்கிறதுதான்” என்றதும் அக்கறியை எறிந்துவிட்டோம். அதன் பிறகு அம்மம்மாவின் வீட்டில் சமைத்த ஆட்டிறைச்சி கறியை சாப்பிட்டோம்.
அன்றையதினம் நள்ளிரவு வேளையில் அலரல் சத்தம் கேட்டது. நுளம்பு வலைக்குள் இருந்தவாறு அமமாவைக் கூப்பிட்டேன். அப்போது வாசலில் நின்று அம்மப்பா என்னைக் கூப்பிட்டு குசினி கதவை திறக்குமாறு கேட்டார். திறந்தேன் அதன்பின்னர் படுக்கையறையை அவதானித்தேன் அம்மா கட்டிலிலும் அப்பா நிலத்திலும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர் என்றார்.
(குகதர்சன்)