எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, April 11, 2013

பிரச்சினைகளில் முன்னுள்ள அமைச்சர்கள் இராஜினாமா: இன்று மு.கா. பம்முகிறது

Print Friendly and PDF


ஒருகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போது அன்றைய முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா செய்வதன் மூலமே முஸ்லிம்களின் தன்மானத்தை காக்கமுடியும் என கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தாம் இராஜினாமா செய்வதன் மூலம் நன்மை கிடைக்குமா என கேட்பது இவர்களின் சுயநல சிந்தனையையே காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; இன்று முஸ்லிம் சமூகம் சிங்கள பேரினவாதத்தால் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் இருந்தே தீர்க்க முடியும் என முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பழைய பல்லவியை பேசுவதன் மூலம் முஸ்லிம்களை வழமைபோன்று ஏமாற்றுகிறார்கள். அத்துடன் அரசாங்கத்துடன் இருந்தால்தான் ஜனாதிபதியை சந்தித்து இதுபற்றி பேசமுடியும் எனவும் தமது கையாலாகா தனத்துக்கு வக்காளத்து வாங்குகிறார்கள்.

அவ்வாறாயின் அமைச்சர்களாக இருப்பதைவிட ஜனாதிபதியின் இணைப்பாளர்களாக இருந்தால் அதுவும் தமது கட்சிகளை கலைத்துவிட்டு ஜனாதிபதியின் கட்சியான சுதந்திரக்கட்சியுடன் இணைந்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கம் ஏற்படும் அல்லவா என்று மக்கள் சிந்திக்க மாட்டார்கள் என நினைத்து அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு செய்ய இவர்கள் முன்வருவார்களா?

உண்மையில் அமைச்சர்களாக அதாவது அரசாங்கத்தின் நக்குத்திண்ணிகளாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு சார்பாக எதையும் முதுகெலும்புடன் பேசமுடியாது என்பதே யதார்த்தமாகும். அதிகமாக பேசினால் விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் என்பது ஜே.ஆர். காலம் முதல் நமது அமைச்சர்களுக்கு இன்னமும் உறைக்காத சொல்லாகும்.

அமைச்சர்களாக இருந்தால் அரசிடமிருந்து சில சலுகைகளை பெறலாம். அதுவும் குறிப்பிட்ட சிலருக்கே கிடைக்கும். சுமூகத்துக்கு பெரிதாக எதுவும் கிடைக்காது. அதேவேளை இனவாதமற்ற அரசாங்கமாயின் சகல இனத்தவரும் சமானமாக கருதப்பட்டு சமூகத்துக்கு சிறந்த சேவைகள் கிடைக்கும். ஆனால் இன்றிருக்கும் நிலை என்ன? அரசுக்கு ஆதரவளித்தும் தமக்கு எதுவுமே முடியவில்லை என ஒப்பாரி வைத்துக்கொண்டே அமைச்சர்களாக இருந்தால்தான் இவற்றைப் பேசி தீர்க்கலாம் என்றும் கூறுவதை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இவர்கள் அமைச்சர்களாக இருந்து இந்த சமூகத்துக்கு இது வரை என்ன உரிமையை பெற்றுக்கொடுத்தார்கள் என்பதையாவது கூறமுடியுமா?

இருந்த உரிமைகளான ஹலாலையும், நிம்மதியாக மதத்தை பின்பற்றி வாழ்வதையும் இந்த அரசாங்கம் திட்டமிட்டு பறித்ததற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் என்ற வகையில் இவர்களும் துணைபோனது மட்டும்தான் மிச்சம். ஆக இத்தகைய கோழைத் தலைவர்களால் சமூகம் காட்டிக்கொடுக்கப்பட்டு, முஸ்லிம் சமூகம் பற்றி நாடாளுமன்றில் பேச எந்த அமைச்சரும் முன்வரமாட்டார் என்ற தைரியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சுப் பதவியில் இருப்பதை விட அதனை தூக்கி எறிவதன் மூலம் சமூகத்தின் தன்மானம் காக்கப்படும். ஆனால், கைசேதம் என்னவென்றால் மு.கா.வின் வரலாற்றில் சமூகத்துக்காக இதுவரை அமைச்சுப் பதவியை தூக்கி வீசியதாக வரலாறு இல்லை. இனியும் அடுத்த தேர்தல் வரை இதனை செய்யமாட்டார்கள் என்பதால்தான் இன்று சமூகம் தன்மானத்தை இழந்து அவஸ்தைகளை தினமும் பெற்றுக்கொண்டிருக்கின்றது என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்துள்ளார்.

(முஹம்மட் ஹஸ்னி)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2