Published On: Tuesday, April 23, 2013
மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம்: பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
அல்-கலாம் பாடசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

பொத்துவில் P/16 இல் இயங்கிவரும் அல்-கலாம் முஸ்லிம் பாடசாலையானது 1C தரமுடைய ஓருமுன்னேற்றம் அடைந்துவரும் பாடசாலையாகும். இப்பாடசாலை 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 1332 மாணவ மாணவிகள் கல்விகற்கின்றனர். 38 வகுப்பறைகள் உள்ளன, 33 ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
ஆனாலும் இப்பாடசாலையானது ஆளணி, பௌதீக வளப்பற்றாக்குறைகளுடன் கடந்த 5 வருடகாலமாக இயங்கிவருகின்றது. குறிப்பாக இப்பாடசாலை ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை ஆரம்பப்பிரிவுக்கு ஆங்கிலப் பாடத்திற்குப் பொறுப்பாக எந்தவொரு ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் விமர்சிக்கின்றனர்.
இந்தவகையில் பெற்றோர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை காரியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

01. ஆசிரியர் தேவை 55 ஆக உள்ள இவ்வேளையில் 33 ஆசிரியர்கள் மட்டுமே கடமை புரிகின்றனர். 22 ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
02. நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பாடரீதியாக நியமிக்கப்படுதல். அதாவது பொருளியல், ஆங்கிலம், விஞ்ஞானம், சித்திரம், வரலாறு. தமிழ், தொழில்நுட்பப் பாடங்கள்.
03. மாணவர்கள் ஆராதனை மண்டபம் அமைத்தல்.
04. விளையாட்டு மைதானத்தைப் புனரமைத்தல்.
05. வகுப்பறைக் கட்டிடங்களை 100’ X 20’ மூன்றுமாடி அமைத்தல்.
06. சிற்றூழியர் நியமித்தல்
07. பாடசாலைக் காவலாளியை நியமித்தல்.
08. பாடசாலைச் சுற்றுமதில் அமைத்தல் .
09. பிரதி அதிபர், உப அதிபர் நியமித்தல்.
“போன்றவற்றை நிவர்த்தி செய்யும் வரையில் எங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம்” என இப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இதுதெடர்பாக இப்பாடசாலை கல்வி அபிவிருத்தி சங்கத்தின் செயளாளர் எம்.ஏ.ஆர் றியாஸிடம் கேட்டபோது, “நாங்கள் முன்வைத்துள்ள இக்கோரிக்கைகளுக்கு மேல்மட்டத்திலிருந்து முடிவு கிடைக்காத வரையில் எங்களது மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர்களாகிய நாங்கள் அனைவரும் முடிவேடுத்துள்ளோம்” எனக் கூறினார்.
(முஹம்மட் அஸ்லம்)