Published On: Friday, April 19, 2013
முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களிடம் பொய்யைக் கூறி சமாளிக்க வேண்டாம்: முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதிக்கு நேரடியாகத் தகவல் கொடுப்பதற்கு முஸ்லிம் மக்களால் முடியாது. முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்களே ஜனாதிபதிக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என மேல் மாகாணசபை ஐ.தே.க உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பிரச்சினைகள் தொடர்பாக தகவல் தந்தால் நடவடிக்கை எடுப்பதாக முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை தொடர்பாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தம்புள்ளைப் பள்ளித் தாக்குதல் முதல் பெபிலியான வர்த்தக நிலையத் தாக்குதல் வரையான இனவாத செயற்பாடுகள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதும் பொலிஸாருக்குத் தெரியும். எனினும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. குற்றமிழைத்தவர்களை அரசு பாதுகாக்கின்றது என்பதே இதிலிருந்து விளங்குகின்றது.
முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து இங்கு ஒன்றும் நடக்கவில்லை. தகவல் தந்தால் நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் தொடர்பாக அவருக்கு ஒன்றும் தெரியாதா? இவ்வாறு போலிவேஷம் போடுவதை முஸ்லிம்கள் ஏற்கமாட்டார்கள்.
முஸ்லிம்கள் மேல் ஜனாதிபதிக்கு உண்மையான அக்கறை இருக்குமாயின் பொலிஸ்மா அதிபரை உடன் அழைத்து இனவாதச் செயல்களைச் செய்தோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும். இதனைச் செய்யாது முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை அழைத்து வந்து பொய்யைக் கூறி சமாளிப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.