Published On: Tuesday, April 02, 2013
மட்டக்களப்பில் முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் குறித்து அதிருப்தி

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் சுற்று நிருபத்திற்கு மாற்றமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கான முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் அந்தந்தப் பாடசாலை மட்டத்திலும், இரண்டாந் தவணைக்கான வினாத்தாள்கள் கோட்ட மட்டத்திலும், மூன்றாந்தவணை வினாப்பத்திரம் வலய மட்டத்திலும் தயாரிக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலாந் தவணைப் பரீட்சைக்கான வினாப்பத்திரம் வலய மட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வருட ஆரம்பத்தின் முதலாம் தவணைக் காலத்தில் ஏற்பட்ட அடைமழை வெள்ளப்பெருக்கு என்பவற்றினாலும் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வுகளினாலும் பாடத்திட்டங்கள் உரியவேளையில் நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை.
இதனைக் கருத்திற் கொண்டே முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்ற பணிப்புரை மாகாண கல்விப் பணிப்பாளரால் விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை தேசத்திற்கு மகுடம் நிகழ்ச்சியை மாணவர்கள் கண்டு களிப்பதற்கு வசதியாக கடந்த 27ம் மற்றும் 28ம் திகதிகளில் வழங்கப்பட்ட விடுமுறைகளுக்குப் பதிலாக இந்தத் தினங்களில் பரீட்சைகளை தொடங்காது ஏப்ரல் முதலாந் திகதி ஆரம்பிக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளர் பணிப்புரை விடுத்திருந்தார்.
இருந்த போதிலும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் இந்த உத்தரவைப் உதாசினம் செய்து மார்ச் 30ஆம் திகதியே தவணைப் பரீட்சையை ஆரம்பித்திருந்த விடயம் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மத்தியில் விசனத்தைத் தோற்று வித்திருந்தது.
இதேவேளை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலைகளில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என்றும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
(குகதர்சன்)