Published On: Monday, October 20, 2014
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட யாழ் முஸ்லிம்கள் புறக்கணிப்பா?
யாழ்ப்பாணத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவருகின்ற கடும் மழையால் யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நாவாந்துறை பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
இந்த மழை காரணமாக வயல் நிலங்களிலும் பள்ளக் காணிகளிலும் வெள்ளநீர் பெருகியுள்ளது. பள்ளக் காணிகளுக்குள் வீடுகள் அமைத்து வசிக்கும் நாவாந்துறை பகுதி மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் நடவடிக்கை மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் அப்பகுதியில் தேங்கியுள்ள வெள்ளத்தை அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
எனினும் அப்பிரதேசத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் அப்பகுதி மக்கள் இதுவரை எவரும் தம்மை வந்து பார்க்கவில்லை என்று குறிப்பிட்டனர். மேலும் கிரம சேவகர் பிரிவான ஜே-87, ஜே-88 ஆகிய பகுதிகளில் பகுதியளவில் குடும்பங்கள் பல தமது இருப்பிடத்தை விட்டு வெள்ள நீர் காரணமாக இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கப்படுகிறது
(பாறுக் சிகான்)
