Published On: Friday, October 17, 2014
புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்
மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஸ்ணமிஷன் மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக லண்டனில் வசிக்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த தனலெட்சுமி றோல்ட் என்பவரின் நிதியுதவி மூலம் துவிச்சக்கர வண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி இராமகிருஸ்ணமிஷன் மகா வித்தியாலயத்தில் ஐந்தாம்தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பாடசாலைக்கு சென்று பாராட்டியதுடன், துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.
ஆரையம்பதி இராமகிருஸ்ணமிஷன் மகா வித்தியாலயத்தில் சசிக்குமார் கிருட்ஷிகன் (188 புள்ளிகள்), பாஸ்கரன் துவாரகன் (180 புள்ளிகள்), யோகரெட்ணம் அக்ஷயன் (175 புள்ளிகள்), வர்ணகுலசிங்கம் காமேஸ்வர் (175 புள்ளிகள்), பரமசிவம் துஷ்யந்தி (171 புள்ளிகள்), நடேசபதி பர்ஷா (165 புள்ளிகள்) ஆகியோர் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி.நே.தங்கவடிவேல் தெரிவித்தார்.
அத்தோடு கற்பித்த ஆசிரியரான சசிகலா விஜயகுமார், பாடசாலை அதிபர் நே.தங்கவடிவேல் ஆகியோரை பாராட்டியதுடன், மேலும் சித்திபெற்ற மாணவர்களின் பெற்றோர்களையும் பாராட்டினார். இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
(த.லோகதக்சன்)
