Published On: Friday, October 17, 2014
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது: மு.கா. வெளிநாட்டில் மந்திராலோசனை
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற சர்ச்சைகள் கட்சி மட்டத்தில் உக்கிரமடைந்து வரும் நிலையில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமத் ஆகியோர் வியாழனன்று திடீரென வெளிநாடு சென்றுள்ளனரென கட்சி வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றது.
வியாழன் நண்பகல் 120 மணியளவில் இருவரும் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் சவூதி அரேபியாவுக்கும், மற்றொரு நாட்டுக்கும் செல்லவுள்ளதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கக் கூடாதென்ற கருத்து கட்சிக்குள் பலமாக வலுவடைந்துவரும் நிலையில் தலைவர்கள் திடீரென வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற நிலையில் அது பற்றி கட்சிக்குள் பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவைத் தலைமையையும் புறந்தள்ளி விட்டு தலைவர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளமை கட்சி முக்கியஸ்தர்களிடையேயும், ஆதரவாளர்களிடையேயும் ஊகங்கள் பலவற்றையும் ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிப் பிரமுகர்களுடன் இரகசிய சந்திப்பொன்றை நடாத்தும் வகையில் இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கலாமெனவும், உள்ளூரில் இவ்வாறு இரகசிய சந்திப்புக்களை நடாத்துவது சாத்தியப்படாததால் வெளிநாடொன்றில் மந்திராலோசனை நடாத்தும் நோக்கில் இவர்கள் சென்றிருக்கலாமென்றும் ஊகங்கள் எழுந்துள்ளன.
ஓ.ஐ.சி. தலைவர் மதனியுடன் கலந்துரையாடும் நோக்கில் இவர்கள் சவூதிக்குச் சென்றிருக்கலாமென்றும், அமைச்சர் ஹக்கீம் ஏற்கனவே சவூதி சென்றிருந்த போது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவரிடம் எடுத்துக் கூறிய விடயங்கள் குறித்து மேலதிக கலந்துரையாடல்களை நடாத்தும் நோக்கில் அங்கு சென்றிருக்கலாமென்றும் மேலும் பலர் கருதுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓ.ஐ.சி. தலைவர் மதனியை அமெரிக்காவில் வைத்து சந்தித்த போது அவரை இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார். மதனியும் அதனை ஏற்றுக் கொண்டு இலங்கை வருவதாக வாக்குறுதியளித்துள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹக்கீமையும், ஹாபிஸ் நஸீரையும் மதனியைச் சந்திக்க அனுப்பியிருக்கலாமென்றும் இலங்கை நிலவரம் குறித்து அவருக்கு எடுத்துக் கூறுவதற்காக இவர்கள் அங்கு சென்றிருக்கலாமென்றும் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் ரவூப் ஹக்கீமும், ஹாபிஸ் நஸீரும் ஜனாதிபதிக்கு விசுவாசமானவர்கள் என்ற வகையில் இருவரும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாமென்றும் ஊகங்கள் தோன்றியுள்ளன.
பெரும்பாலான மு.கா. முக்கியஸ்தர்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கக் கூடாதென்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்குள் முன்னொருபோதும் இல்லாத வகையில் பாரிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன. கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மதில் மேல் பூனையாக இருக்காது தீர்க்கமான முடிவொன்றினை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றார். கட்சியின் பொதுச் செயலாளரான ஹஸன் அலி அரசாங்கத்தை பல்வேறு மட்டத்திலும் விமர்சித்து வருகின்றார்.
மாகாண சபை உறுப்பினரும், தலைவருக்கு மிக நெருக்கமானவருமான ஏ.எம்.ஜெமீல் கரையோர மாவட்டம் தொடர்பில் முன்வைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் நெருங்கும் போது கட்சியில் உட்பூசல்கள் சந்திக்கு வரலாமென்றும் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தேர்தல்கள் வரும்போது ஆதரவாளர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளிப்போம் என்று அறிவித்துவிட்டு, உயர்பீடத்தில் ஆராய்ந்து விட்டு இறுதியில் கட்சித் தலைவருக்கு தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். இது வழமையாக இடம்பெற்ற விடயம். என்றாலும் இது இம்முறை பலனளிக்காது என்றும், தீர்க்கமான முடிவு எடுக்காவிட்டால் கட்சி மேலும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கூட கட்சித் தலைவர் ஹக்கீமும் மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளார். தவிசாளர் பஷீர் சேகுதாவூத், பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோரும் கூட ஜனாதிபதிக்கு ஆதரவாளர்களே. தலைவர்கள் ஜனாதிபதிக்கு விசுவாசமானவர்களாக இருந்தாலும், கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்கள், அடிமட்ட ஆதரவாளர்கள் தலைவர்களுக்கு நேர்மாற்றமான நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதால் திரிசங்கு நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தது.
