Published On: Tuesday, July 28, 2015
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா அப்துல்கலாம் மறைவையொட்டி 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா அப்துல்கலாம் மறைவையொட்டி 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பாரத ரத்னா’ விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார். மேகாலயா மாநிலத்தில் கல்லூரி விழாவில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட தால் அவர் மரணம் அடைந்தார். 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, இந்தியாவின் 11-வது ஜனாதிபதி பதவி வகித்தவர் அப்துல் கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 83 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர். கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர்.
அவரது மறைவையொட்டி 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து டெல்லி கொண்டு வரப்படுகிறது. அவரது உடலை பிரதமர் மோடி பெற்றுக் கொள்கிறார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவையடுத்து இன்று (செவ்வாய் கிழமை) தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவையடுத்து, புதுச்சேரி முழுவதும் பள்ளி, கல்லூரி என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.