Published On: Tuesday, July 28, 2015
கலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் இறுதிச் சடங்குகள்: மத்திய அரசு தகவல்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடல், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள், அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்திய நாட்டின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாம் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருந்தபோது நேற்று மாலை திடீரென மரணம் அடைந்தார். அப்துல்கலாமின் மறைவு இந்திய நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து 7 நாட்களுக்கு இந்திய அரசு துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. அப்துல்கலாம் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அப்துல்கலாமின் மரண செய்தி ராமேஸ்வரத்தில் காட்டு தீ போல் பரவியது. கலாமின் மரணம் பற்றிய செய்தி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது அண்ணன் முகம்மது முத்து மீரா லெப்பை மரக்காயர் இல்லத்தை அடைவதற்குள் அவரது வீட்டின் முன்பு பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் கூடிவிட்டனர். மேலும், அப்துல்கலாமின் தாய், தந்தை மற்றும் சகோதர, சகோதரிகளின் உடல்கள் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்ஹா அடக்க ஸ்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், அப்துல்கலாமின் உடலையும் ராமேஸ்வரத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று கலாமின் சகோதரர் மற்றும் உறவினர்கள், உள்ளூர் மக்களின் விருப்பமாக இருந்தது. இதனை அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து அப்துல்கலாமின் உடல், அவரது குடும்பத்தாரின் விருப்பப்படி ராமேஸ்வரத்திலேயே அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதையடுத்து, பாம்பன்-ராமேஸ்வரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குண்டு கிராமம் அருகே அப்துல்கலாமின் உடலை அடக்கம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு வரப்படும் அப்துல்கலாமின் உடல், நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்குள்ள பள்ளி மைதானத்தில் வைக்கப்பட உள்ளது. அங்கு, பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.