Published On: Tuesday, July 28, 2015
சிரேஷ்ட அமைச்சர் பௌசி அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டால்

சிரேஷ்ட அமைச்சர் பௌசி அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டால் அது இந்த நாட்டின் மிகப்பெரும் வரலாற்று நிகழ்வாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இனவாதக்கட்சியல்ல என்பதை நிரூபித்ததாக முடியும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இவ்விடயம் பற்றி ஊடகவியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது
இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளில் அமைச்சர் பௌசி அவர்களே சிரேஷ்டமானவர் என்பதுடன் ஆளுமை மிக்க ஒருவராவார். அந்த வகையில் அவர் பிரதமராக நியமிக்கப்பட முழு தகுதியும் உடையவராவார்.
இந்த நாட்டை பொறுத்த வரை சகல மதத்தினரும் சமானம் என்றே அரசியல் சாசனம் சொல்கிறது. நடை முறையில் அதற்கு மாற்றமான செயற்பாடுகளே அதிகம் காணப்படுவதால் இனங்கள் மத்தியில் சந்தேகமும் அச்சமும் காணப்படுகிறது. இவற்றை தீர்க்கும் வகையில் பிரதான அரசியல் கட்சிகள் சகல துறைகளிலும் இன ரீதியாக இல்லாமல் அரசியல் நியமனங்களை வழங்க வேண்டும். அந்த வகையில் எதிர் வரும் தேசிய அரசாங்கத்தின் பிரதமராக அமைச்சர் பௌசி நியமிக்கப்படுவது மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக முடியும்.
நாட்டில் இனவாதம் ஒழிக்கப்பட்டு நல்லதொரு நல்லாட்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி மைத்ரிபால அவர்கள் அமைச்சர் பௌசியை பிரதமராக ஒரு வருடத்துக்கேனும் நியமித்தால் அது நல்லாட்சியின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதுடன் கடந்தகால ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கான பெரும் கௌரவமாகவும் இந்நடவடிக்கை அமையும் எனவும் முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.
(எஸ்.அஷ்ரப்கான்)