Published On: Sunday, December 27, 2015
நாவலடி சந்தியில் வாகன விபத்து
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் நாவலடி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரையும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விடுமுறையின் நிமிர்த்தம் கொழும்பில் இருந்து பாசிக்குடாவுக்கு வந்து மீண்டும் கொழும்பு பயணித்த குடும்ப உறுப்பினர்கள் பயணித்த வேன் சைக்கிளில் வியாபாரத்துக்காக விறகு ஏற்ற வந்த குடும்பஸ்தர் மீது மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் சைக்கிளில் பயணித்த தேவாலய வீதி முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான் வைரமுத்து (வயது 52) என்பவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேனின் சாரதி வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்


