Published On: Wednesday, December 30, 2015
சாய்ந்தமருது பிரதேசத்தில் சமுர்த்தி திட்டம் வெற்றி பெறுவதற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் சிறந்த செயற்பாடே காரணம் - பிரதேச செயலாளர் சலீம் புகழாராம்
சாய்ந்தமருது பிரதேசத்தில் சமுர்;த்தி திட்டம் வெற்றி பெறுவதற்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சிறந்த செயற்பாடே காரணம் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தினால் சாய்ந்ததமருது பிரதேச திவிநெகும உதவி பெறும் 60 குடும்பங்களுக்கு 30 லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார தொழில்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும தலைமை முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கணக்காளர் எம்.எம்.உசைனா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, திவிநெகும முகாமையாளர்களான எஸ்.றிபாயா, ஏ.ஆர்.எம்.பர்ஹான், எம்.எஸ்.எம்.மனாஸ், உதவி முகாமையாளர்களான எம்.எம்.எம்.முபாறக், ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தன்னலமற்ற கடமைப் பொறுப்பு, உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு விரைந்து செயற்படுதல், பொதுமக்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கும் செயற்பாடுகள் என்பவற்றை பாராட்டுவதோடு இதன் தாக்கம் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திலும் அம்பாறை மாவட்ட செயலக மட்டத்திலும் எமது உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலயம் பற்றிய நல்லபிப்பிராயாத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனையிட்டு நான் பெருமையடைகின்றேன்.
இன்று வழங்கப்படுகின்ற தொழில் முயற்சிகளுக்கான உபகரணங்களைக் கொண்டு மக்களாகிய நீங்கள் உங்களது வருமானங்களை தேடிக்கொள்ள வேண்டும். அதனூடகவே இத்திட்டம் வெற்றியடையும்.
மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இன்றைய நல்லாட்சியில் மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றமை நல்லாட்சியின் சிறப்பம்சமாகும் எனவும் தெரிவித்தார்.
(ஹாசிப் யாஸீன்)

