Published On: Sunday, January 10, 2016
முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் செய்த கல்யாண் ராமன் கைது மனிதநேய மக்கள் கட்சி புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:சிறுபான்மையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த டிசம்பர் 30 அன்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் திருமிகு டி.கே. ராசேந்திரன் இ.கா.ப. அவர்களிடம் நேரில் முறையிட்டோம்.
கல்யாண் ராமன் கடந்த டிசம்பர் 26 மாலை 6.01 மணிக்கு அவரது முகநூலில் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை தொடர்புபடுத்தி ஒரு அவதூறு பதிவு செய்திருந்தார். இதனைச் சுட்டிக்காட்டி நமது புகார் அளிக்கப்பட்டது.
நமது புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல்துறை அதன் அடிப்படையில் சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றைப் பதிவு செய்து இன்று (09.01.2016) அதிகாலை கல்யாண் ராமனைக் கைது செய்து அவரை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளது.
கடந்த ஹஜ் புனித யாத்திரையின் போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் முகநூலில் அதுகுறித்து வெறுப்பு பிரச்சாரம் பதிவிட்டார். இது குறித்து திருமங்கலம் தமுமுக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இப்போது மனிதநேய மக்கள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் கல்யாண் ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூலில் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு இடமில்லை என்பதை உணர்த்திய தமிழகக் காவல்துறைக்கும், உரிய உத்தரவுகளைப் பிறப்பித்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.முகநூலில் வெறுப்பு பிரச்சாரம் செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும்.என்று எம்.எச்.ஜவாஹிருல்லாதெரிவித்துள்ளார்.
(திருச்சி - சாஹுல் ஹமீட்)
