Published On: Monday, January 11, 2016
தவ்ஹித் ஜமா அத் பல தேர்தல்களில் பல கட்சிகளை ஆதரித்து பிரசாரம் எவ்வித பலனும் இல்லை
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எந்த கட்சியையும் ஆதரிக்காது என்று மாநில தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபீ கூறினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கலந்தாய்வு கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தின் முடிவில் மாநிலத்தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபீ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சியில் வருகிற 31ம் தேதி ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடக்கிறது. இதில் 15 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்பார்கள். இதற்காக தெருமுனை பிரசாரங்கள் நடந்து வருகிறது.திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜன. 31ஆம் தேதி இணை வைப்பு என்கிற ஷிர்க்கை ஒழிப்பதற்கான மாநாடு நடத்தப்படவுள்ளது. தர்கா வழிபாடு, தகடு, தாயத்து, பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்பதை எடுத்து கூறுவதற்காக இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. இதுபோன்ற செயல்கள் பெரிய பாவம் என்றும், இந்தப் பாவத்தில் இருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். கொலை, கொள்ளை, அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் மது. வருவாய் கிடைக்கிறது என்பதற்காக மதுக்கடைகளை தமிழக அரசே திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சிறுபான்மை இனமாக இருக்கக் கூடிய இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3.5 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு தமிழகத்தில் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தி தரப்படும் என்று தேர்தல் காலங்களில் வாக்குறுதி கொடுத்தார்.ஆனால் இன்னும் உயர்த்தி வழங்கவில்லை. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். தவ்ஹித்ஜமாஅத் பல தேர்தல்களில் பல கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்தது. ஆனால் எவ்வித பலனும் இல்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்க போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
